நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது- ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி
- தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 20 ஆயிரம் கன அடியாக வந்தது.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல்:
தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், கபினி அணையும் நிரம்பின. பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 20 ஆயிரம் கன அடியாக வந்தது.
தற்போது கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து சரிந்தது. அணைகளின் திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டது.
இதன் காரணமாக இன்றுகாலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது. 9 மணி அளவில் நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நீர்வரத்து குறைந்ததால் மெயின் அருவியில் குளிக்க இன்று மதியம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் ஆனந்தமாக மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
அவர்கள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.