தமிழ்நாடு செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை: 3ஆவது நீதிபதி தீர்ப்பு

Published On 2025-10-10 16:46 IST   |   Update On 2025-10-10 16:46:00 IST
  • இதுகுறித்து சிவில் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.
  • இஸ்லாமியர்கள் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய உத்தரவை உறுதிப்படுத்தினார்.

திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் ஆடு, கோழி பலியிட தடைவிதித்து நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவை உறுதிப்படுத்தி, மூன்றாவது நீதிபதி ஆர். விஜயகுமார் இன்று தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானுவின் உத்தரவையும் அவர் உறுதிப்படுத்தினார்.

திருப்பரங்குன்றம் மலையின் சில பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என்றும், சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட்டு மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதாகவும், இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

மேலும், இது தொடர்பாக பல்வேறு மனுக்கள் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் ஜெ. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமர்வு விசாரித்து மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.

இதனால், வழக்கு மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக தனி நீதிபதி தனது விசாரணையைத் தொடர்ந்து நடத்தினார்.

இந்த நிலையில் இறுதியாக, தனி நீதிபதி ஆர். விஜயகுமார் ஆடு, கோழி பலியிட தடை விதித்து, இது குறித்து சிவில் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்ற நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தினார்.

மேலும், இஸ்லாமியர்கள் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானுவின் உத்தரவையும் உறுதிப்படுத்தினார். இந்த தீர்ப்புகள் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான நீண்டகால பிரச்சனைகளுக்கு ஒரு முடிவை எட்டியுள்ளன.

Tags:    

Similar News