மாணவிக்கு பாலியல் தொல்லை- சேரன்மகாதேவி தனியார் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்டு
- தகவல் அறிந்த மாணவியின் சக நண்பர்களான மாணவர்கள் சிலர் ஆத்திரமடைந்து, சம்பந்தப்பட்ட பேராசிரியரை தாக்கினர்.
- புகாரின் அடிப்படையில், கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் செயல்பட்டு வரும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சமீபத்தில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் கேரளாவின் மூணாறு பகுதிக்கு சென்றனர்.
அப்போது, உடன் சென்ற பேராசிரியர் ஒருவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் சக நண்பர்களான மாணவர்கள் சிலர் ஆத்திரமடைந்து, சம்பந்தப்பட்ட பேராசிரியரை தாக்கினர்.
இச்சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கல்லூரியில் பேராசிரியர்கள் இருக்கும் அறைக்குள் புகுந்து பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை மாணவர்கள் தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், கல்லூரி பேராசிரியரை மாணவர்கள் சரமாரியாகத் தாக்குவதும், சிலர் நாற்காலிகளையும், பேக்குகளையும் தூக்கி எறிவதும், கைகளால் தாக்குவதும் போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.
இதனிடையே பாலியல் புகாருக்கு உள்ளான சம்பந்தப்பட்ட கல்லூரி பேராசிரியரை 'சஸ்பெண்டு' செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.