தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை காணலாம்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு

Published On 2025-07-29 10:13 IST   |   Update On 2025-07-29 10:13:00 IST
  • இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது.
  • தண்டோரா மூலம் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஒகேனக்கல்:

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கி பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், கபினி அணையும் நிரம்பி விட்டன.

நேற்று இரவு 8 மணிக்கு கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1 லட்சத்து 23 ஆயிரத்து 794 கன அடியாக அதிகரித்தது.

இந்த தண்ணீர், கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

நீர்வரத்து அதிகரிப்பால் காவிரி ஆற்றில் இருக்கரை யும் தொட்டப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 1 லட்சத்து 05 ஆயிரம் கனஅடி வந்தது. பின்னர் படிபடியாக நீர்வரத்து உயர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது.

நீர்வரத்து அதிகரிப்பால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரில் முழ்கின. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 4-வது நாளாக மாவட்ட கலெக்டர் சதீஸ் தடை விதித்துள்ளார்.

இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டு போட்டு பூட்டப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு கேட்டு முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காவிரி ஆற்றின் அழகை ரசிக்க மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். நீர்வரத்து அதிகரித்ததால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஒகேனக்கல், ஊட்டமலை, நாடார் கொட்டாய், நாக மரை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து சென்று கண் காணித்து வருகின்றனர். மேலும் தண்டோரா மூலம் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகளவு திறக்கப்பட்டு உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

Tags:    

Similar News