தமிழ்நாடு செய்திகள்

மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்.

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Published On 2025-06-15 11:24 IST   |   Update On 2025-06-15 11:24:00 IST
  • பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.
  • குற்றால அருவிகளில் குளிப்பதற்காக ஆர்வமுடன் வந்த வெளியூர் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் 2 நாட்களுக்கு பின்பு நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் நேற்று இரவு முழுவதும் குற்றாலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்ததால் குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் இன்று பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். புலி அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் குளிப்பதற்காக ஆர்வமுடன் வந்த வெளியூர் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

தொடர்ந்து விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளுக்கு மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News