தமிழ்நாடு செய்திகள்

சுருக்குமடி வலை பயன்பாட்டை தடுக்கக்கோரி கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்

Published On 2025-09-02 15:00 IST   |   Update On 2025-09-02 15:00:00 IST
  • மீனவ மக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
  • அதிவேக குதிரை திறன் கொண்ட என்ஜினை பயன்படுத்தி பூம்புகார், சந்திரபாடி மீனவ கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருவதாக தெரிகிறது.

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ மக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மீன்பிடி ஒழுங்கு முறை தடை சட்டம் 1983-ன் தடையைமீறி, அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை மற்றும் அதிவேக குதிரை திறன் கொண்ட என்ஜினை பயன்படுத்தி பூம்புகார், சந்திரபாடி மீனவ கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருவதாக தெரிகிறது.

இதனால் மீன்வளம் பாதிக்கப்படுவதாக கூறியும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மீன்வள துறையை கண்டித்தும் தரங்கம்பாடி மீனவ கிராமத்தினர் தலைமையில் மீனவர்கள் தொழில் புறக்கணிப்பில் ஈடுபட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் கருப்பு கொடியுடன் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை பகுதியில் உள்ள கடலில் இறங்கி ஏராளமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், பெண்கள் தரங்கம்பாடி கடற்கரையில் கைகளில் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

Similar News