பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மின்சார வாரியம்... தாயை இழந்து கதறும் குழந்தைகள்
- மழை நீரில் உள்ள கேபிள் மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
- வரலட்சுமி குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளரான வரலட்சுமி, இன்று அதிகாலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் உள்ள கேபிள் மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து உயிரிழந்த வரலட்சுமி குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலை கீழ் செல்வதாகவும் அபாயகரமாக உள்ளதாகவும் அங்கு இருக்கும் மக்கள் பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் அளித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கண்ணகி நகர், எழில் நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் மின்சார கேபிள்கள் அபாயகரமாக பல இடங்களில் உள்ளது என்று புகார் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.
இதற்கிடையே, மின்சாரம் தாக்கி உயிரிழந்த வரலட்சுமிக்கு 12 வயதில் பெண் குழந்தையும் 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர் வரலட்சுமி தான். தாயை இழந்த குழந்தைகள் 'எங்க அம்மா விட்டுட்டு போய்ட்டாங்க...' என்று சொல்லி கதறுவது கண்போரை கண்கலங்க செய்துள்ளது.