தி.மு.க. கூட்டணியில் அதிக தொகுதிகள் கேட்கவில்லை - துரை வைகோ
- பள்ளிக்கல்வித்துறையில் மும்மொழி கொள்கைக்கு உடன்படாததால் அவர்கள் தமிழகத்திற்கு நிதியை அளிக்கவில்லை.
- செப்டம்பர் 15-ந் தேதி திருச்சியில் தமிழகமே திரும்பிப் பார்க்கக் கூடிய மாநாட்டை நடத்த உள்ளோம்.
கோவை:
திருப்பூரில் இன்று ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் துரைவைகோ இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்தார்.
கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ம.தி.மு.க குறைந்தபட்ச அங்கீகாரம் பெற வேண்டும். அந்த அங்கீகாரத்தை பெறுவதற்கு குறிப்பிட்ட சீட்டை பெற வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. ஆனால் இறுதி முடிவை, கூட்டணியுடன் பேசி தலைமை தான் முடிவு எடுக்கும்.
அதேசமயம் நாங்கள் இத்தனை சீட்டை எதிர்பார்க்கிறோம். இத்தனை சீட் கேட்டு கோரிக்கை வைக்கிறோம் என்பது தவறான சித்தரிப்பு.
ரெயில்வே துறையில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்.
பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் இல்லாமல், இதர மாநிலங்களுக்கு உரிய நிதியை வழங்குவதில்லை என்று குற்றச்சாட்டு ஓரளவு உண்மைதான்.
பள்ளிக்கல்வித்துறையில் மும்மொழி கொள்கைக்கு உடன்படாததால் அவர்கள் தமிழகத்திற்கு நிதியை அளிக்கவில்லை. இதனால் பல்வேறு அடிப்படை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக துறை சார்ந்த மந்திரிகளிடமும் எங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் அரசியல் செய்யக்கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
தமிழக அரசு பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அவர்களால் முடிந்ததை செய்து இருக்கிறார்கள். ஓரிரு குறைகள் இருக்கிறது. இருந்தாலும் அவர்களது தேர்தல் வாக்குறுதிகளை ஓரளவிற்கு நிவர்த்தி செய்துள்ளனர். மேலும் வரக்கூடிய தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.
செப்டம்பர் 15-ந் தேதி திருச்சியில் தமிழகமே திரும்பிப் பார்க்கக் கூடிய மாநாட்டை நடத்த உள்ளோம். தேர்தல் வரக்கூடிய காலம் என்பதால் எங்களுடைய கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். பூத் கமிட்டிகள் அமைப்பது உள்பட 7 மண்டலங்களில் செயல்வீரர் கூட்டம் நடத்த உள்ளோம்.
வட மாநிலங்களில் அமித்ஷா ஆங்கில மொழி என்பது அந்நிய மொழி. ஆங்கிலம் என்பது புறக்கணிக்கப்பட வேண்டும். ஆங்கிலம் இல்லாத பாரதத்தை உருவாக்க வேண்டும் என்று பிரசாரம் மேற்கொண்டு உள்ளார்.
ஆங்கிலம் இல்லாமல் நாம் எப்படி இருக்க முடியும்? உலக தொடர்பு மொழியே ஆங்கிலம் தான். நம்முடைய தாய்மொழி ஒரு புறம் இருந்தாலும், உலக தொடர்பு மொழி என்பது ஆங்கிலம் தான். மொழியை வைத்து பா.ஜ.க தான் அரசியல் செய்கிறது.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் தட்டுப்பாடு இருப்பதை மறுக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக நிகழ்ந்த சில குளறுபடிகள் மற்றும் இன்றைக்கு இருக்கக்கூடிய நிதிச் சுமை, நிதி பற்றாக்குறையால் அதனை சரி செய்ய முடியாமல் இருக்கிறது.
10 ஆண்டுகள் ஏற்பட்டதை 3,4 ஆண்டுகளில் சரி செய்து விட முடியாது. காலப்போக்கில் அதனை தமிழக அரசு சரி செய்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது.
2009-ல் இலங்கை போர் முடிந்ததில் இருந்து தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வது தொடர்கிறது.
இதனால் மீனவர்கள் அவர்களது குழந்தைகளை இந்த மீனவத் தொழிலுக்கு அனுப்ப வேண்டாம் என்று நினைக்கிறார்கள். அடுத்த தலைமுறை இந்த மீனவத் தொழிலே செய்ய முடியாது என்ற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.
வாரந்தோறும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதும், கொடுமையாக தாக்குவதும் நிகழ்ந்து வருகிறது.
இதற்கு உரிய நிரந்தர தீர்வை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். அது எந்த அரசாக இருந்தாலும் சரி.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.