தமிழ்நாடு செய்திகள்
null

நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது

Published On 2024-12-17 15:20 IST   |   Update On 2024-12-17 16:43:00 IST
  • கஞ்சா பதுக்கிய வழக்கு மதுரை போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
  • விசாரணையின்போது சவுக்கு சங்கர் ஆஜராகாததால் நீதிபதி கைது வாரண்ட் பிறப்பித்தார்.

கஞ்சா வைத்திருந்ததாக தேனி மாவட்ட போலீசார் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்வேறு தடைகளை தாண்டி இந்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் ஜாமின் பெற்று சமீபத்தில் விடுதலை ஆனார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜராகாததால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர்.

முன்னதாக,

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீஸ் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தேனியில் தங்கி இருந்த அவர் கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் மற்றொரு வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் அவர் கைதானார். கஞ்சா பதுக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு மதுரை போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின்போது சவுக்கு சங்கர் ஆஜராகி வந்தார். கடந்த சில விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி செங்கமல செல்வன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதும் சவுக்கு சங்கர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் சவுக்கு சங்கரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News