சென்னையில் தொடர் கனமழை.. விடுமுறை அளிக்காததால் பள்ளி மாணவர்கள் அவதி
- இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்தனர்.
- மழை நிற்காததால் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்துடன் தங்களின் வீடுகளுக்கு சென்றனர்.
டிட்வா புயலானது சென்னையை நெருங்கி வருவதால் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்துவந்த நிலையில் அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு முதலே சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்தனர்.
ஆனால், விடுமுறை விடப்படாததால் மாணவர்கள் மழையிலேயே பள்ளிக்கு சென்றனர். மாலை நேரம் ஆகியும் மழை நிற்காததால் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்துடன் தங்களின் வீடுகளுக்கு சென்றனர்.
இதனால், பள்ளி மாணவர்களும், அவர்களது பெற்றோரும் அவதி அடைந்துள்ளனர்.