தமிழ்நாடு செய்திகள்

பார்வையற்றோருக்கும் உதவும் வகையில் ஸ்மார்ட் வாக்கிங் ஸ்டிக்-கண்ணாடி உருவாக்கிய அரசு பள்ளி மாணவர்கள்

Published On 2024-12-03 15:05 IST   |   Update On 2024-12-03 15:05:00 IST
  • ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட சில தொழில்நுட்ப உதவிகளுடன் இதனை நாங்கள் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
  • பார்வையற்றோர் தங்களது சுற்றுப்புறத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

சூலூர்:

பார்வையற்றோருக்கு உதவும் வகையில் சென்சார் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட் வாக்கிங் ஸ்டிக் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடி உள்ளிட்டவற்றை கோவை அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.

சூலூர் அருகே உள்ள அரசூரைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் ஐசக் ஜெபக்குமார், மருதீஷ் மற்றும் ஜே. வீரமணி ஆகியோர் பள்ளியில் செயல்படும் கற்றல், கற்பித்தல் ஆய்வுக் கூடத்தில், எளிய பொருட்களைப் பயன்படுத்தி பார்வையற்றோருக்கு உதவும் வகையில் சென்சார் தொழில்நுட்பத்தில், ஸ்மார்ட் வாக்கிங் ஸ்டிக், ஸ்மார்ட் கண்ணாடி ஆகிவற்றை உருவாக்கி உள்ளனர்.

சென்சார் மற்றும் சிப் போர்டுகளைப் பயன்படுத்தி மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த வாக்கிங் ஸ்டிக்கானது அதிர்வுகளை உணர்ந்து பயனாளருக்கு எச்சரிக்கை செய்கிறது.

இதன் மூலம் பார்வையற்றோர் தடைகள் மற்றும் படிக்கட்டுகள் குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். மைக்ரோ கண்ட்ரோலர் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்ட கண்ணாடி, பேட்டரி மூலம் இயங்குகிறது. இது பயனாளருக்கு முன்னால் உள்ள தடைகளை அடையாளம் கண்டு, ஒலி மூலம் எச்சரிக்கையும் செய்கிறது.

தங்களது ஆசிரியரின் வழிகாட்டுதலின் படி இந்த கருவிகளை நாங்கள் தயாரித்துள்ளோம். இந்த கருவிகள் பார்வையற்றோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட சில தொழில்நுட்ப உதவிகளுடன் இதனை நாங்கள் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் பார்வையற்றோர் தங்களது சுற்றுப்புறத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

அரசு பள்ளி மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு, பிற மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தில் ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு, தன்னம்பிக்கையையும் ஊக்குவிக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.

Tags:    

Similar News