கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்
- கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம் ரூ.53 கோடி செலவில், 184 கடைகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது.
- உணவகங்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை, வில்லிவாக்கம், சிவசக்தி நகரில் வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம் கட்டப்பட்டு உள்ளது. இதனை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம் ரூ.53 கோடி செலவில், 184 கடைகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. உணவகங்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் அமைக்கப்பட்டு உள்ளது.
11-ந்தேதி (நாளை) மாலை 6 மணிக்கு கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, வெற்றி அழகன் எம்.எல்.ஏ., சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர்-முதன்மைச் செயலாளர் பிரகாஷ், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் சுப்பையன், முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கமிஷனர் க.வீ.முரளிதரன், மாநகராட்சி மத்திய வட்டார துணை கமிஷனர் கவுசிக் உள்பட பலர் பங்கேற்றனர்.