தமிழ்நாடு செய்திகள்

இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் எச்சரிக்கை

Published On 2025-11-08 11:11 IST   |   Update On 2025-11-08 11:11:00 IST
  • இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் சிலர் சென்னையில் பல இடங்களில் ஓட்டி வருவதாக புகார்கள் எழுந்தன.
  • இளஞ்சிவப்பு ஆட்டோகளை பெண்கள் மட்டுமே இயக்க ஆணையிடப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை மாநகரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு ஆட்டோ சேவை நடைமுறைப்படுத்தப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பின் படி ரூபாய் 1 லட்சம் மானியம் மற்றும் வங்கி கடனுதவியுடன் கடந்த 8 மார்ச் 2025-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு இளஞ்சிவப்பு ஆட்டோ வழங்கப்பட்டது.

இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் சிலர் சென்னையில் பல இடங்களில் ஓட்டி வருவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சமூக நலத்துறை கள ஆய்வு குழு கடந்த சில நாட்களாக ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் சில ஆண்கள் ஓட்டுவதாக கண்டறியப்பட்டது. தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின் கீழ், இளஞ்சிவப்பு ஆட்டோகளை பெண்கள் மட்டுமே இயக்க ஆணையிடப்பட்டுள்ளது.



இந்த விதிகள் பற்றி இளஞ்சிவப்பு ஆட்டோ இயக்கும் பயனாளிகளுக்கு பலமுறை எடுத்துரைத்த பின்னரும் ஆண்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டு விதிகளை மீறினால் ஆர்.டி.ஓ மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சமூகநலத்துறையால் எச்சரிக்கப்பட்டது.

இந்த நிலையில் சமூக நலத்துறை ரீதியாக எச்சரிக்கை விடப்பட்ட பின்னரும் தொடர்ந்து ஆண்கள் சிலர் இளஞ்சிவப்பு ஆட்டோ இயக்கி வருவது புகார் பெறப்பட்டுள்ளது. மேலும், இது போல் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News