காலை உணவுத் திட்டம் நாளைய தமிழ்நாட்டின் அடித்தளம் - ஆசிரியர் செயலால் நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்
- ரவா கிச்சடி,சாம்பார் மாதிரி உணவை உண்டு கருத்துக்களை பதிவேட்டில் பதிவு செய்தேன்
- ஆசிரியர் ஒருவரே அதைச் செய்திருப்பது கண்டு மகிழ்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், "இன்று எம்பள்ளி மாணவர்களுக்கு ரவா கிச்சடி,சாம்பார் மாதிரி உணவை உண்டு கருத்துக்களை பதிவேட்டில் பதிவு செய்தேன்..சிறப்பாக இருந்தது" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இதை ரீ-ட்வீட் செய்துள்ள முதல்வர் ஸ்டாலின், "எந்த மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாலும், மாவட்ட ஆட்சியர் போன்ற உயரதிகாரிகளைப் பார்த்தாலும், உங்கள் பகுதியில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தைப் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்தீர்களா? என்று நான் கேட்பது வழக்கம்! அந்த வகையில், ஆசிரியர் ஒருவரே அதைச் செய்திருப்பது கண்டு மகிழ்கிறேன்.
காலை உணவுத் திட்டம் என்பது வெறுமனே மாணவர்களின் பசியைப் போக்கும் திட்டமோ, ஊட்டச்சத்தை அளிக்கும் திட்டமோ மட்டுமல்ல; நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம் அது!" என்று தெரிவித்துள்ளார்.