தமிழ்நாடு செய்திகள்

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பக்தர்கள் முகத்தில் மர்ம 'ஸ்பிரே' அடித்த சிறுவன்: போலீசார் விசாரணை

Published On 2025-09-09 11:15 IST   |   Update On 2025-09-09 11:15:00 IST
  • கோவில் போலீஸ் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
  • சிறுவனின் தாயாரையும் போலீசார் விசாரணை செய்ததிலும் முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறியுள்ளார்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று இரவு 8 மணி அளவில் சிறுவன் ஒருவன் தான் கையில் வைத்திருந்த 'சில்லி ஸ்பிரே'யை அருகில் இருந்தவர்கள் முகத்தில் அடித்துள்ளான். இதனால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

உடனே அவர்கள் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த கோவில் பணியாளர்கள் அந்த சிறுவனை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது சிறுவன் தனது சொந்த ஊர் திருப்பூர் எனவும், தனது உறவினர்களுடன் கோவிலுக்கு வந்ததாக கூறியுள்ளான்.

அப்போது அவனுடன் இருந்த மற்ற சிறுவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவலை கூறினர்.

உடனே கோவில் நிர்வாகம் கோவில் போலீஸ் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிறுவர்கள் தாங்கள் பயன்படுத்திய 'சில்லி ஸ்பிரே' அங்கு நின்ற ஒரு காருக்கு அடியில் இருந்து எடுத்ததாக கூறியுள்ளனர். அதில் ஒரு சிறுவனின் தாய் கோவிலில் பக்தர்களிடம் யாசகம் பெற்று வருகிறார் என்பதும் தெரியவந்தது.

சிறுவனின் தாயாரையும் போலீசார் விசாரணை செய்ததிலும் முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறியுள்ளார். உடனே போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

காருக்கு அடியில் கிடந்து எடுத்ததாக கூறிய அந்த 'சில்லி ஸ்பிரே' கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களை ஏமாற்றி நகை, பணத்தை பறிப்பதற்காக யாரேனும் மர்மநபர்கள் கொண்டு வந்தார்களா? அல்லது பெண்கள் தற்காப்புக்காக கொண்டு வந்ததை யாரேனும் விட்டுச் சென்றார்களா? அது சிறுவனின் கைக்கு வந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News