தமிழ்நாடு

பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற கொடூர இளம்பெண்: உடந்தையாக இருந்த பெற்றோர் சிக்கினர்

Published On 2023-10-28 04:45 GMT   |   Update On 2023-10-28 04:45 GMT
  • வித்யா கவுரிக்கு, தனது வீட்டின் அருகே வசிக்கும் ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
  • பைக்குள் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையின் உடல் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கோவை:

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள மெட்டுவாவியை சேர்ந்தவர் வித்யாகவுரி (வயது26). இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார். திருமணம் ஆன சில மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து வித்யாகவுரியை அவரது கணவர் பிரிந்து சென்று விட்டார். இதனால் வித்யா கவுரி தனது தந்தை வீட்டுக்கு வந்து, அவர்களுடன் ஒன்றாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், வித்யா கவுரிக்கு, தனது வீட்டின் அருகே வசிக்கும் ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர். மேலும் யாரும் இல்லாத நேரத்தில் உல்லாசம் அனுபவித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

இதன் காரணமாக வித்யா கவுரி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்பதாலும், இது வெளியில் தெரிந்தால் அவமானம் ஆகி விடும் என்பதால் குழந்தையை வளர்க்காமல், குழந்தையை கொன்று விட வித்யா கவுரி முடிவு செய்தார்.

இதுகுறித்து தனது தந்தை முத்துசாமி(வயது62), தாய் புவனேஸ்வரி (49) ஆகியோரிடமும் தெரிவித்தார். அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவத்தன்று பச்சிளம் குழந்தை என்றும் பாராமல், குழந்தையை ஒரு பிளாஸ்டிக் சாக்கு பையில் உயிருடன் வைத்து கட்டினர்.

பின்னர் ஆட்கள் நடமாட்டம் குறைந்த பின்னர் 3 பேரும் சாக்குபையை தூக்கி கொண்டு வெளியில் வந்தனர். ஆட்கள் இருக்கிறார்களா என்பதை பார்த்து விட்டு, நேராக அங்குள்ள தண்ணீர் இல்லாத கிணற்றின் அருகே சென்று, குழந்தையை தூக்கி கிணற்றுக்குள் வீசி விட்டு சென்றனர்.

இதில் குழந்தை பரிதாபமாக இறந்து விட்டது. பின்னர் எதுவும் நடக்காதது போல 3 பேரும் அமைதியாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வரவே அப்பகுதி பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக இதுகுறித்து, நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றை பார்வையிட்டனர். அப்போது கிணற்றுக்குள் ஒரு சாக்குப்பை இருந்தது.

உடனடியாக போலீசார் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, அங்கிருந்த சாக்குப்பையை திறந்து பார்த்தனர்.

அப்போது பைக்குள் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையின் உடல் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தது யார் என விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வித்யா கவுரி என்பவர் தான் தனது தாய், தந்தையுடன் சேர்ந்து குழந்தையை கிணற்றில் வீசி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வித்யாகவுரியை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை முத்துசாமி, தாய் புவனேஸ்வரியையும் கைது செய்தனர்.

பிறந்த 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News