குழந்தை சரியாக சாப்பிடாததால் இளம்பெண் தற்கொலை
- கஜேந்திரன் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
- லாவண்யா தனது மாமனார், மாமியாருடன் வசித்து வருகிறார்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தொட்டம் பாளையத்தை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மனைவி லாவண்யா (25). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கஜேந்திரன் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். லாவண்யா தனது மாமனார், மாமியாருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு லாவண்யா தனது அறையில் இருந்ததாகவும், அறையில் திடீரென குழந்தையின் சத்தம் அதிகமாக இருந்ததால் லாவண்யாவின் மாமனார் மற்றும் மாமியார் கதவை தட்டி பார்க்கும் பொழுது திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்க்கும் பொழுது லாவண்யா அறையில் சீலிங் பேனில் சேலையால் தூக்குமாட்டி தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
லாவண்யாவை இறக்கி பார்க்கும் பொழுது மூச்சு இல்லாததால் உடனே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே லாவண்யா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் லாவண்யாவின் ஒரு வயது பெண் குழந்தை சரியாக சாப்பிடுவதில்லை எனவும், தன்னுடைய குழந்தை குண்டாக இல்லை எனவும் மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.