தமிழ்நாடு

முதியவரை இளம்பெண் பிரியா சரமாரியாக தாக்கும் காட்சி

பணத்தை திருடியதாக கூறி போதையில் முதியவரை சரமாரியாக தாக்கி புரட்டி எடுத்த இளம்பெண்

Published On 2023-01-13 06:19 GMT   |   Update On 2023-01-13 06:19 GMT
  • தூங்கி கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை எழுப்பிய சுடிதார் அணிந்திருந்த இளம்பெண் ஒருவர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
  • பிரியா முதியவரை எதற்காக தாக்கினார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது. இங்கிருந்து கோவை, சேலம் உள்பட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை பஸ் நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

இந்தநிலையில் பஸ் நிலைய வளாகத்தில் நன்றாக தூங்கி கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை எழுப்பிய சுடிதார் அணிந்திருந்த இளம்பெண் ஒருவர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீ என் பணத்தை திருடி விட்டாய், பணத்தை கொடு, இல்லையென்றால் உன்னை சும்மா விடமாட்டேன் என்றார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென ஆத்திரமடைந்த அந்த பெண் தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி முதியவரை தாக்கத்தொடங்கினார். முகத்திலும் உடலிலும் சரமாரியாக தாக்கினார். இதைப்பார்த்த பயணிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி நடந்த விவரத்தை கேட்டனர். அப்போது அவர் பணத்தை திருடிவிட்டதாக கூறியுள்ளார். அதற்கு பொதுமக்கள் ஏன் அவரை அடிக்கிறீர்கள், போலீசில் புகார் தெரிவிக்க வேண்டியதுதானே என்று எச்சரித்தனர். இருப்பினும் ஆத்திரம் தீராத அந்த பெண் முதியவரை தொடர்ந்து தாக்கினார். கீழே படுத்திருந்த அவரை புரட்டி எடுத்ததுடன் நெஞ்சில் காலால் பலமுறை மிதித்தார். வயதான முதியவர் என்றும் பாராமல் அவர் இந்த செயலில் ஈடுபட்டார். அதோடு நிறுத்தாமல் அவரது சட்டையை பிடித்து தரையில் தரதர வென்று இழுத்து சென்றார். மேலும் அங்கிருந்த சுவரிலும் தள்ளினார். பொதுமக்கள் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அவர் கேட்காமல் தொடர்ந்து தாக்கி கொண்டிருந்தார். இதில் முதியவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் பெண் தாக்கியதில் வலி தாங்க முடியாமல் அலறினார்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசவா என்று கெத்து காட்டி போலீசாரை திகைக்க வைத்தார். பின்னர் அவரை போலீசார் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்த பெண் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த பிரியா என்பதும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. அவர் மதுபோதையில் நீண்ட நேரமாக பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்துள்ளார். அப்போதுதான் அவர் முதியவர் மீதான தாக்குதலை நிகழ்த்தியுள்ளார். முதியவர் பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் பிரியா முதியவரை எதற்காக தாக்கினார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் முதியவரை பிரியா சரமாரியாக தாக்கும் சம்பவத்தை பஸ் பயணிகள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட திருப்பூர் மத்திய பஸ் நிலைய வளாகத்தில் ஆதரவற்றவர்கள் பலர் தங்கி வருகின்றனர். இதில் சிலர் குடிபோதையில் படுத்து உறங்குகின்றனர். இதனால் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு பயணிகள் தவிர மற்றவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News