தமிழ்நாடு

வனத்துறையினர் அனுமதி மறுப்பால் பணி நிறுத்தம்- பழவேற்காடு முகத்துவார பகுதியில் படகில் சென்று அமைச்சர் ஆய்வு

Published On 2023-08-03 08:08 GMT   |   Update On 2023-08-03 08:08 GMT
பணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வனத்துறையினர் தங்களிடம் அனுமதி பெறவில்லை என்று தெரிவித்தனர்.

பொன்னேரி:

பழவேற்காடு ஏரியும் கடலும் சந்திக்கும் முகத்துவார பகுதியில் ஏற்பட்டுள்ள மணல் தீட்டு காரணமாக நீரோட்டம் தடைபட்டு உள்ளது மேலும் படகுகள் வந்து செல்லும் பொழுது தரை தட்டி சேதம் அடைந்து விடுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

எனவே முகத்துவாரத்தை தூர்வாரி தூண்டில் வளைவு அமைத்து மணல் அரிப்பு ஏற்படாத வகையில் நிரந்தர கான்கிரீட் தடுப்பு அமைக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் முகதுவாரம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. அதற்கான பணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வனத்துறையினர் தங்களிடம் அனுமதி பெறவில்லை என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து முகத்துவார பணி நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து அமைச்சர் மதிவாணன் பழவேற்காடு முகத்துவார பகுதிக்கு வந்து ஆய்வு செய்தார். அவர் படகுமூலம் சென்று பழவேற்காடு முகத்துவாரப் பகுதியை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் மதிவாணன் கூறும்போது, பழவேற்காடு முகத்துவாரம், மீன்வளம் மட்டுமின்றி 62 மீனவ கிராமங்களின் வாழ்வாதாரம் ஆகும். இதன் சீரமைப்புக்காக மீன்வளத்துறை சார்பில் ரூ.26 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள சிக்கல் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என்றும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் பிரச்சனை தீர்க்கப்பட்டு மீனவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பழவேற்காடில் சுற்றுலா த்தலத்தை மேம்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

Tags:    

Similar News