தமிழ்நாடு செய்திகள்

மீஞ்சூர் அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

Published On 2023-09-24 13:33 IST   |   Update On 2023-09-24 13:33:00 IST
  • மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
  • ஊராட்சி தலைவர் சுஜாதாரகு சுத்தமான குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

பொன்னேரி:

மீஞ்சூர் ஒன்றியம் நாலூர் ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர், வெங்கடாபுரம் இந்துஜா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது

இவ்வாறு வழங்கப்பட்டு வரும் குடிநீர் அதிக உப்பு தன்மையுடன் இருப்பதால் அதனை அப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்த முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுபற்ற அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் சுத்தமான குடிநீர் கேட்டு அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர், சாலை வசதி மின்விளக்கு வசதி ,அடிப்படை வசதிகள் மற்றும் பழுதான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சரி செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அவர்களிடம் ஊராட்சி தலைவர் சுஜாதாரகு பேச்சு வார்த்தை நடத்தினார். சுத்தமான குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, அண்ணா நகரில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சரி செய்யாததால் கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக நாங்கள் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடத்தில் தண்ணீர் கொண்டு வருகிறோம். குழாயில் வரும் தண்ணீரை சமையல் செய்யமுடியவில்லை. இதனால் கூடுதல் விலை கொடுத்து கேன் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.சாலை வசதி, தெரு மின்விளக்கு செய்து தர வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News