தமிழ்நாடு

தொண்டமுத்தூர் அருகே பயிர்களை காக்க சேலைகளால் வேலி அமைக்கப்பட்டுள்ள காட்சி.

தொண்டாமுத்தூர் அருகே விளைநிலங்களில் காட்டுபன்றிகள் தொல்லை

Published On 2022-12-23 08:37 GMT   |   Update On 2022-12-23 08:37 GMT
  • பெரிய உருவம் கொண்ட காட்டு யானைகள் ஏற்படுத்தும் சேதத்தை விட காட்டுப்பன்றிகள் ஏற்படுத்தும் சேதமே அதிகமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
  • விளைநிலத்தை சுற்றிலும் வண்ண வண்ண சேலைகளை கட்டி வைத்து வேலி போன்று அமைத்து பயிர்களை பாதுகாத்து வருகிறார்கள்.

வடவள்ளி:

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் உள்ள மக்கள் விவசாயத்தை முக்கிய தொழிலாக செய்து வருகிறார்கள்.

தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. சின்னவெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் பயிரிட்டு வருகிறார்கள். இதுதவிர குறுகிய கால பயிர்களான கீரை வகைகள், பூக்கள், மக்காசோளம் உள்பட பல்வேறு வகையான பயிர்களையும் விவசாயிகள் பயிரிடுகின்றனர்.

தற்போது தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 120 நாள் பயிரான மக்காசோளம் தை மாதம் அறுவடை செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

குறிப்பாக 50-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் கூட்டமாக புகுந்து மக்காசோள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பெரிய உருவம் கொண்ட காட்டு யானைகள் ஏற்படுத்தும் சேதத்தை விட காட்டுப்பன்றிகள் ஏற்படுத்தும் சேதமே அதிகமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளுக்கு நிரந்தர தீர்வு காணுமாறு பலமுறை வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் கூறினர்.

இந்த நிலையில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் காட்டு பன்றிகள் புகுவதை தடுக்கும் விதமாக விளை நிலத்தை சுற்றிலும் வண்ண வண்ண சேலைகளை கட்டி வைத்து வேலி போன்று அமைத்து பயிர்களை பாதுகாத்து வருகிறார்கள். இதன் மூலம் காட்டுப்பன்றி தொல்லை சற்று குறையும் என எதிர்பார்க்கிறார்கள். 

Tags:    

Similar News