தமிழ்நாடு

சென்னை குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்தது

Published On 2023-05-11 08:35 GMT   |   Update On 2023-05-11 08:35 GMT
  • பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1015 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
  • செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மி.கனஅடியில் 2,613 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8 டி.எம்.சிக்கு கீழ் குறைந்து காணப்படுகிறது. ஏரிகளில் மொத்தம் 7,310 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 7,657 மி.கன அடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணா தண்ணீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,450 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு 310 கனஅடியாக வருகிறது.

ஏற்கனவே பூண்டி ஏரியில் உள்ள தண்ணீர் புழல் ஏரிக்கு அனுப்பப்படுகிறது. எனவே பூண்டி ஏரியில் கூடுதலாக கிருஷ்ணா தண்ணீரை சேமித்து வைக்க முடியும். மேலும் கிருஷ்ணா நீர் தொடர்ந்து வரும் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் தண்ணீரை அனுப்பி சேமித்து வைக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

ஏற்கனவே புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு இந்த ஆண்டு முழுவதும் சென்னையில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் சப்ளை செய்யமுடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1015 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இங்கிருந்து புழல் ஏரிக்கு 300 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மி.கனஅடியில் 2,613 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் 3,300 மி.கனஅடியில் 2,459 மி.கனஅடியும், சோழவரம் ஏரியில் 1,081 மி.கன அடியில் 62 கனஅடியும் தண்ணீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 468 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

Tags:    

Similar News