தமிழ்நாடு செய்திகள்

ஆலங்குளத்தில் சார்பதிவு அலுவலக பெண் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

Published On 2023-09-21 11:49 IST   |   Update On 2023-09-21 11:49:00 IST
  • ஆனந்தியின் வீட்டுக்குள் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • ஆனந்தியின் கணவர் அரிநாராயணன் பாப்பாக்குடி வட்டார காங்கிரஸ் தலைவராக உள்ளார்.

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரை சேர்ந்தவர் அரி நாராயணன். இவரது மனைவி ஆனந்தி. இவர் சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 25-06-2022 அன்று இவர் போலி பத்திரம் பதிவு செய்த புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு ஒரு ஆண்டாக வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டுக்கு ஒரு ஜீப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வந்தனர். தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு பால்சுந்தர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வந்திருந்தனர்.

அவர்கள் ஆனந்தியின் வீட்டுக்குள் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வைக்கப்பட்டுள்ள ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே சட்டத்திற்கு புறம்பாக போலி பத்திரங்களை பதிவு செய்து கொடுப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் இன்று அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. ஆனந்தியின் கணவர் அரிநாராயணன் பாப்பாக்குடி வட்டார காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவர் ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். மேலும் மருதம்புத்தூரில் சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News