காதலர் தினம் எதிரொலி- கன்னியாகுமரி கடற்கரையில் பரிசு பொருட்களை தேடும் காதல் ஜோடிகள்
- காதலர் தினத்தன்று தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதற்காக பரிசுப் பொருட்களை விதவிதமாக வாங்கி செல்கின்றனர்.
- காதலர் தினத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் கன்னியாகுமரியில் காதல் ஜோடியினர் இப்போதே வரத் தொடங்கி விட்டனர்.
கன்னியாகுமரி:
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி உலக காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு வருகிற 14-ந்தேதி நாடு முழுவதும் உலக காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
காதலர் தினத்தன்று காதல் ஜோடியினர் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவருக்கொருவர் வாழ்த்து அட்டைகள் வழங்கியும், பரிசுப் பொருட்களை வழங்கியும் கொண்டாடி மகிழ்வது வழக்கம். அந்த அடிப்படையில் வருகிற 14-ந்தேதி காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக காதல் ஜோடியினர் இப்போதே பரிசுப் பொருட்களை தேடி அலையத் தொடங்கி விட்டனர். கன்னியாகுமரி கடற்கரையில் இன்று காலை முதலே ஏராளமான காதல் ஜோடியினர் வந்து பரிசுப் பொருட்களை தேடி அலைந்த வண்ணமாக இருந்தனர். காதலர் தினத்தன்று தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதற்காக பரிசுப் பொருட்களை விதவிதமாக வாங்கி செல்கின்றனர்.
கன்னியாகுமரி கடற்கரையில் இருக்கும் சங்கு வியாபாரிகளிடம் காதல் ஜோடியினர் தங்களது காதலர்களின் பெயர்களை எழுதி பரிசுப் பொருட்களாக வாங்கி செல்கின்றனர். அதேபோல ஒரே அரிசியில் காதலர்கள் தங்களது பெயர்களை எழுதி வாங்கிச் செல்கின்றனர். மேலும் காதலர் தின வாழ்த்து அட்டைகளையும் கடைகளில் வாங்கிச் செல்கின்றனர்.
காதலர் தினத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் கன்னியாகுமரியில் காதல் ஜோடியினர் இப்போதே வரத் தொடங்கி விட்டனர். இதனால் கடற்கரையில் காதல் ஜோடிகள் அத்துமீறுகிறார்களா? என்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காதலர் தினத்தன்று கன்னியாகுமரி கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காதலர் தினத்தன்று கன்னியாகுமரி கடற்கரையில் மறைவான இடங்களில் அத்துமீறி செயல்படும் காதல் ஜோடியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.