தமிழ்நாடு செய்திகள்

திற்பரப்பு அருவி

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்...!

Published On 2022-12-10 16:31 IST   |   Update On 2022-12-10 16:31:00 IST
  • அருவியில் தண்ணீர் மிதமாகப் பாய்வதால் மதியம் முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க விதித்திருந்த தடை விலக்கப்பட்டது.
  • பள்ளி, கல்லூரி விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்து அருவியில் குளித்து உற்சாகமாய் சென்றனர்.

குமரி:

மலையோரப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணையின் நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த 6-ம் தேதி ஆயிரம் கன அடி உபரி நீர் மறுகால்வழியாக திறந்து விடப்பட்டது.

இந்த உபரி நீரும், கோதையாற்று தண்ணீரும் சேர்ந்ததால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழைய் பெய்யாவிட்டாலும் அருவியில் தண்ணீர்வரத்து குறையவில்லை. இதனால் நேற்று வரை திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமுடன் திரும்பிச்சென்றனர்.

இந்நிலையில் பேச்சிப்பாறை அணையில் தண்ணீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் இயல்பு நிலைக்கு வந்தது. தற்போது தண்ணீர் மிதமாகப் பாய்வதால் இன்று மதியம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதித்திருந்த தடை விலக்கப்பட்டது. இன்று பள்ளி, கல்லூரி விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்து அருவியில் குளித்து உற்சாகமாய் சென்றனர்.

மேலும், அவ்வப்போது பெய்துவரும் சாரல் மழையால் திற்பரப்பில் குளு குளு சீசன் நிலவியது.

Tags:    

Similar News