தமிழ்நாடு செய்திகள்

டி.என்.பாளையம் அருகே தோட்டத்தில் புகுந்து கன்று குட்டியை கொன்ற சிறுத்தை

Published On 2023-07-24 12:08 IST   |   Update On 2023-07-24 12:08:00 IST
  • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 5 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.
  • வனத்துறையினர் சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தனர்.

டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி சமனாங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது தோட்டத்தில் கட்டி வைத்திருந்த கன்று குட்டியை நேற்று முன்தினம் இரவு ஒரு சிறுத்தை தோட்டத்துக்குள் புகுந்து கடித்து கொன்றது.

அந்த கன்று குட்டியின் உடல் பாகங்கள் அருகே உள்ள விவசாய சோளகாட்டில் கிடந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து டி.என்.பாளையம் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள தோட்டப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 5 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.

இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் அந்த சிறுத்தை சோளகாட்டுக்கு வந்தது. அங்கு சிதைந்த நிலையில் கிடந்த கன்று குட்டியின் மீதமுள்ள உடல் பாகங்களை உணவுக்காக எடுத்து சென்றதாக அந்த பகுதி மக்கள் கூறினர்.

இதனால் சிறுத்தை நடமாட்டம் அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தனர். மேலும் கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை விரைவில் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டி.என்.பாளையம் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News