தமிழ்நாடு

பஸ்சில் தனியாக பயணித்த பெண் என்ஜினீயரிடம் 'சில்மிஷம்' செய்த வாலிபர்

Published On 2023-09-09 10:03 GMT   |   Update On 2023-09-09 10:03 GMT
  • பஸ்ஸில் இருந்த சக பயணிகளும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக வாலிபரை தாக்கினார்கள்.
  • பஸ்சில் நடந்த சம்பவங்களை அந்த இளம் பெண் நாகர்கோவிலில் உள்ள தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அந்த பெண் அங்கேயே தங்கி வேலை பார்க்கிறார். வாரத்தின் கடைசி நாட்களில் ஊருக்கு வருவது வழக்கம்.

அதேபோல் நேற்று இரவு வேலை முடிந்ததையடுத்து, இன்று அதிகாலை ஊருக்கு புறப்பட்டார். திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த கேரளா அரசு பஸ்ஸில் பயணம் செய்தார். இளம்பெண்ணின் பின்னால் இருந்த இருக்கையில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

அவர் பஸ்புறப்பட்ட சிறிது நேரத்திலேயே முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண் என்ஜினியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த இளம்பெண், வாலிபரை எச்சரித்தார். இதனால் உஷாரான அந்த வாலிபர் சிறிது நேரம் எதுவும் செய்யாமல் இருந்தார்.

பின்பு மீண்டும் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் கூச்சலிட்டதுடன், அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினார். அப்போது பஸ்ஸில் இருந்த சக பயணிகளும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக வாலிபரை தாக்கினார்கள்.

இதைத் தொடர்ந்து அந்த வாலிபர் மார்த்தாண்டத்தில் பஸ்சை விட்டு இறங்க முயன்றார். ஆனால் அவரை பஸ்சை விட்டு இறங்கவிடாமல் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். பஸ்சில் நடந்த சம்பவங்களை அந்த இளம் பெண் நாகர்கோவிலில் உள்ள தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

அவர்கள் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த பஸ் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்ததும், இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பிடிபட்ட வாலிபரை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது அவர் மதுரை பகுதியை சேர்ந்தவர் என்பதும், என்ஜினீயராக இருப்பதாகவும் கூறினார். மேலும் அவர் நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு ஊருக்கு செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

ஓடும் பஸ்ஸில் பெண் என்ஜினீயரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு சக பயணிகள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News