தமிழ்நாடு

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு டிசம்பரில் போட்டித்தேர்வு

Published On 2022-07-07 12:30 GMT   |   Update On 2022-07-07 12:30 GMT
  • தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே, நேரடியாக பணி நியமனம் செய்யக்கோரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்
  • மொத்தம் 5861 ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியிருக்கிறது.

சென்னை:

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஆரம்பத்தில் இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் தகுதித் தேர்வு முதல்கட்ட தேர்வுதான் என்றும் இரண்டாவதாக அரசுப் பணிக்கு மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என அரசாணை 149 வெளியிடப்பட்டது. 2018ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி இந்த அரசாணை வெளியானது.

இந்த அரசாணை காரணமாக யாரும் எளிதில் வேலைக்கு செல்ல முடியாது என்றும், எனவே இந்த அரசாணையை ரத்து செய்துவிட்டு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே, நேரடியாக பணி நியமனம் செய்யக்கோரியும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இதற்கிடையே கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், இந்த அரசாணை 149 ரத்து செய்யப்படும் என கூறியிருந்தது. அதன்படி அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வலியுறுத்தி வரும்நிலையில், அரசாணை ரத்து இல்லை என்பது தற்போது தெளிவாகி உள்ளது.

நடப்பு ஆண்டில் பல்வேறு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள், காலி பணியிங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை கடந்த 5ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. தற்போது தகுதித் தேர்வு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித் தேர்வு கட்டாயம் என்று 2018ம் ஆண்டு அரசாணை வெளியிட்டாலும்கூட அந்த தேர்வு இதுவரை நடைபெறவில்லை. முதல் முறையாக வரும் டிசம்பர் மாதம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1874 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 3987 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 5861 பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியிருக்கிறது.

அரசாணை 149 ரத்து தொடர்பாக அரசுத் தரப்பில் இருந்து எந்தவிதமான தகவலும் தங்களுக்கு வரவிலை என்பதால் ஏற்கனவே அறவித்தபடி போட்டித்தேர்வை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Tags:    

Similar News