தமிழ்நாடு

பலாத்கார வழக்கில் நடவடிக்கை எடுக்க தவறிய பெண் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்

Published On 2023-10-08 07:13 GMT   |   Update On 2023-10-08 07:13 GMT
  • போலீஸ் விசாரணைக்கு பயந்து மாணிக்கம் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
  • வழக்கை விசாரிக்க நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆலங்காயம்:

வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 52). விவசாயி. இவரது மனைவி சிவகாமி. தம்பதியினருக்கு 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர்.

மாணிக்கம் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை மாணிக்கம் புத்துகோவில் அருகே உள்ள பெத்த கல்லுப்பள்ளி ரெயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணிக்கம் மற்றும் அவரது நண்பர் கோவிந்தன்(85) ஆகியோர் சேர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கடந்த 4-ந்தேதி வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து போலீஸ் விசாரணைக்கு பயந்து மாணிக்கம் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதை தொடர்ந்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.

அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தவறிய அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தியை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கை விசாரிக்க நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன்(85) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News