டாஸ்மாக் கடையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த மதுபிரியர்களை விரட்டியடித்த பெண்கள்
- மதுபானகடையை அங்கிருந்து அகற்றக்கோரி பொதுமக்கள் மதுபானக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் குடிமகன்களை விரட்டியடித்தனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கடைக்கு தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் மது வாங்க வருகின்றனர்.
இந்தநிலையில் அங்கு மது வாங்க வரும் சிலர் அங்கேயே குடித்து விட்டு அருகிலுள்ள கடைகளுக்கு சென்று படுத்து உறங்குவதும்,ரோட்டிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதும் என அந்த இடத்தையே அசிங்கப்படுத்தி வருவதாக பொது மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் மதுபானகடையை அங்கிருந்து அகற்றக்கோரி பொதுமக்கள் மதுபானக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பல்லடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம். ஆனந்தன், நிர்வாகிகளுடன் கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், பொது மக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள இந்த மதுபான கடையை அகற்றக்கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளேன். மேலும் தமிழக அரசு 500 மதுபான கடைகளை அகற்றுவதாக அறிவித்து விட்டு வியாபாரம் குறைவாக உள்ள மதுபான கடைகளை மட்டுமே மூடி உள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள மதுபான கடைகளை மூட வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு எம்.எல்.ஏ.,காரை நோக்கி சென்ற போது அவரை சூழ்ந்து கொண்ட குடி மகன்கள் சிலர், மதுபான கடையை மூடக்கூடாது.நகரபகுதியில் இந்தக்கடை மட்டுமே உள்ளது. எனவே இங்கிருந்து மதுபான கடையை மாற்றக்கூடாது என கோரிக்கை விடுத்தனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் குடிமகன்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.