தமிழ்நாடு செய்திகள்

முக்கிய கோவில்களில் முதியோர்-மாற்றுத்திறனாளிகள் எளிதில் சாமி தரிசனம் செய்ய சக்கர நாற்காலி வசதி

Published On 2022-06-15 12:09 IST   |   Update On 2022-06-15 12:47:00 IST
  • தேவையான எண்ணிக்கையில் சக்கர நாற்காலிகளை கொள்முதல் செய்யவும், சாய்வு தளங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • சக்கர நாற்காலியில் வருபவர்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் தேவையான இடங்களில் மரப்பலகையிலான சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

சென்னை:

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) இரா.கண்ணன், அறநிலையத்துறை இணை ஆணையர், துணை, உதவி ஆணையர் மற்றும் செயல் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சட்டசபை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, 48 முதுநிலை கோவில்களில் முதியோர்கள்-மாற்றுத்திறனாளிகள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாக கோவில் வளாகத்தில் மரத்திலான சாய்வுத் தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்து இருந்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தேவையான எண்ணிக்கையில் சக்கர நாற்காலிகளை கொள்முதல் செய்யவும், சாய்வு தளங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கோவில்களில் சக்கர நாற்காலி வசதி உள்ளது என்பதை பக்தர்கள் எளிதில் அறியும் வகையில் அறிவிப்பு செய்ய வேண்டும். கோவில் நுழைவு வாயில் அருகில் குறைந்தபட்சம் 5 சக்கர நாற்காலிகள் இருக்க வேண்டும்.

இதற்காக தனியாக ஒரு பணியாளர் பொறுப்பில் இருக்க வேண்டும்.

சக்கர நாற்காலியில் வருபவர்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் தேவையான இடங்களில் மரப்பலகையிலான சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News