தமிழ்நாடு

அன்னூர் அருகே தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

Published On 2024-04-19 06:00 GMT   |   Update On 2024-04-19 07:08 GMT
  • கடந்த இரு மாதமாக முறையாக குடிநீரும் வழங்காததால் பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர்.
  • கால்நடைகளிடம் மனு அளித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் அன்னூர் அருகே பொகலூர் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டில் கோபிராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் கிராமங்கள் உள்ளது.

இந்த கிராமங்களில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய கூலித் தொழிலாளர்கள்.

கோபிராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் கிராமங்களுக்கு சொந்தமாக 3½ ஏக்கர் பரப்பளவில் குட்டை உள்ளது. இந்த குட்டைக்கு அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் கீழ் தண்ணீர் கொண்டு வர கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் பணிகள் ஆரம்பிக்கப்படாமலேயே திடீரென நின்று விட்டது. இதுகுறித்து பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. கடந்த இரு மாதமாக முறையாக குடிநீரும் வழங்காததால் பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர்.

இதுகுறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை பலமுறை நேரில் சந்தித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கோபிராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் கிராம மக்கள் அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தங்கள் ஊரின் பஸ் நிறுத்தம் பகுதியில் தேர்தலை புறக்கணிக்க போவதாக பதாகைகள் வைத்தனர்.

இன்று பாராளுமன்றத் தேர்தல் தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இந்த நிலையில் கோபி ராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு அத்திக்கடவு-அவினாசி திட்டம் கொண்டு வரப்படாததை கண்டித்து தேர்தலை புறக்கணித்தனர்.

மேலும் கால்நடைகளிடம் மனு அளித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனிடையே கிராம மக்கள் யாரும் வாக்களிக்க செல்லாததால் கிராமத்திற்கு உட்பட்ட பொகலூர் 58-வது வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் யாரும் இன்றி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காத்து வாங்கிக் கொண்டு உள்ளனர்.

Tags:    

Similar News