தமிழ்நாடு

விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை அக். 7-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2023-09-26 07:17 GMT   |   Update On 2023-09-26 07:17 GMT
  • வழக்கு தொடர்பாக 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மே மாதம் தாக்கல் செய்தனர்.
  • வழக்கின் விசாரணைக்காக கடந்த மாதம் 29-ந்தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியுடன் ஆஜராகியிருந்தார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் டாக்டர் விஜயபாஸ்கர். இவர், அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 மதிப்பில் சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீதும் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அவரது வீடு, கல் குவாரிகள், நிறுவனங்கள், சென்னையில் உள்ள அவரது வீடு உள்பட மொத்தம் 56 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பாக 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மே மாதம் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வழக்கின் விசாரணைக்காக கடந்த மாதம் 29-ந்தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியுடன் ஆஜராகியிருந்தார். அப்போது வழக்கின் விசாரணையை செப் 26-ந்தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தனர்.

இதனை தெடர்ந்து அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கர் வரமுடியாத நிலையில் அவரது வழக்கறிஞர் ஆஜராகி, வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகையின் நகல்களில் சில பக்கங்கள் விடுபட்டுள்ளது அதனை முழுமையாக வழங்க வேண்டும் என்று வாதிட்டனர். இதனை கேட்ட நீதிபதி பூரண ஜெயஆனந்த், இந்த வழக்கு சம்பந்தமான ஆவணங்களை முழுமையாக விஜயபாஸ்கர் தரப்புக்கு லஞ்ச ஒழிப்பு துறை வழங்க உத்தரவிட்டு, வழக்கை வருகிற அக்டோபர் மாதம் 7-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

Similar News