தமிழ்நாடு

மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயிலை வழிமறித்த காட்டுயானை

Published On 2023-08-08 06:59 GMT   |   Update On 2023-08-08 06:59 GMT
  • மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணிகளுடன் மலைரெயில் புறப்பட்டது.
  • ரெயில்வே தண்டவாளத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று நடந்து சென்றது.

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினந்தோறும் காலை 7.10 மணியளவில் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணிகளுடன் மலைரெயில் புறப்பட்டது. பயணிகள் வனங்களை ரசித்தபடியும், இயற்கை நீர்வீழ்ச்சிகளை பார்த்த படியும் ரெயிலில் பயணித்து கொண்டிருந்தனர்.

ஹில்குரோவ் பகுதியில் ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயில்வே தண்டவாளத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று நடந்து சென்றது. மேலும் ரெயிலை நோக்கியும் யானை வந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதற்கிடையே மலை ரெயிலில் பயணித்தவர்கள், தண்டவாளத்தில் காட்டு யானை நிற்பதை பார்த்து அச்சம் அடைந்தனர்.

இருப்பினும் யானையை பார்த்த ஆர்வத்தில், ரெயிலில் இருந்தபடி அங்கு சுற்றி வந்த காட்டு யானையை செல்போனில் வீடியோ எடுத்தனர்.

இதற்கிடையே யானை ரெயிலை மறித்த தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் யானை அந்த இடத்தை விட்டு நகரவில்லை. 10 நிமிடத்துக்கு பிறகு மீண்டும் அடர்ந்த காட்டுக்குள் திரும்பி சென்றது. அதன்பிறகு மேட்டுப்பாளையம் மலை ரெயில் மீண்டும் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது.

இந்த நிலையில் யானை ரெயிலை மறித்த வீடியோவை பயணிகள் சிலர் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிடவே தற்போது அது வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News