தமிழ்நாடு

தி.நகரில் 4 இடங்களில் இலவசமாக வாகனங்களை நிறுத்த வசதி- போக்குவரத்து போலீசார் ஏற்பாடு

Published On 2022-10-12 07:23 GMT   |   Update On 2022-10-12 07:23 GMT
  • பனகல் பூங்கா எதிரே உள்ள ராமகிருஷ்ணா மெயின் வளாகத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களை நிறுத்தலாம்.
  • பிரகாசம் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் மோட்டார் சைக்கிளை நிறுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை:

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையை கொண்டாட அனைவரும் தயாராகி வருகிறார்கள். இதையொட்டி புத்தாடைகள் வாங்க ஜவுளிக்கடைகளில் மக்கள் குவிந்து வருகிறார்கள்.

சென்னையின் வர்த்தக மையமாக தி.நகர் உள்ளது. சாதாரண நாட்களிலேயே இந்த பகுதியில் கூட்டம் அலைமோதும்.

தீபாவளிக்கு இன்னும் 12 நாட்களே உள்ளதால் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க தி.நகர் பகுதிக்கு சென்னை புறநகர் பகுதியில் இருந்து பொதுமக்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசல் மற்றும் வாகன நெரிசலால் திக்குமுக்காடும் நிலை உள்ளது.

இதையடுத்து தி.நகரில் தீபாவளியை முன்னிட்டு வாகன நெரிசலை குறைக்கும் வகையில் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு போக்குவரத்து போலீசார் 4 இடங்களை ஒதுக்கி உள்ளனர்.

இதில் பனகல் பூங்கா எதிரே உள்ள ராமகிருஷ்ணா மெயின் வளாகத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களை நிறுத்தலாம். பிரகாசம் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் மோட்டார் சைக்கிளை நிறுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல் சோமசுந்தரம் விளையாட்டு திடலில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் நிறுத்தம், தண்டபாணி தெருவில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளி அருகே வாகனங்களை நிறுத்தவும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

இதுகுறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் தொடர்பாக போக்குவரத்து போலீஸ் சார்பில் தி.நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.

Tags:    

Similar News