தமிழ்நாடு

மது விருந்தின் போது மோதல்- பால் வியாபாரி கத்தியால் குத்தி படுகொலை

Published On 2023-08-25 05:12 GMT   |   Update On 2023-08-25 05:12 GMT

அனுப்பர்பாளையம்:

திருப்பூர் அவினாசி சாலை எஸ்.ஏ.பி.சந்திப்பு ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரத்பாண்டி (வயது30), பால் வியாபாரி. இவருக்கு திருமணமாகி விட்டது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவரது மனைவிக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து சரத்பாண்டியின் நண்பர்களான அதேபகுதியை சேர்ந்த நரசிம்ம பிரபு(25), கணேஷ் (30) மற்றும் சுள்ளான் பிரபு (25) ஆகியோர் பார்ட்டி வைக்குமாறு சரத்பாண்டியை வலியுறுத்தினர்.

நண்பர்களின் தொல்லை தாங்க முடியாமல் கடந்த 13-ந்தேதி சரத்பாண்டி, நரசிம்மபிரபு, கணேஷ், சுள்ளான் பிரபு ஆகிய 4 பேரும் அங்கேரிபாளையம் பிரிவு சுடுகாட்டிற்கு மது குடிக்க சென்றனர். அங்கு 4 பேரும் அமர்ந்து மது குடித்தனர்.

அப்போது போதை தலைக்கு ஏறியதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் நரசிம்மபிரபு, கணேஷ் மற்றும் சுள்ளான்பிரபு ஆகிய 3 பேரும் சேர்ந்து கத்தியால் சரத்பாண்டியை குத்திவிட்டு தப்பி சென்றனர்.

இதில் ரத்த வௌ்ளத்தில் மிதந்த சரத்பாண்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரத்பாண்டி நேற்று இரவு இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நரசிம்மபிரபு, கணேஷ் மற்றும் சுள்ளான் பிரபு ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News