ஐ.எஸ். ஐ. எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு- ஈரோட்டில் கைதான வாலிபர் இன்று கோர்ட்டில் ஆஜர்
- பெங்களூர் திலக் நகரில் உள்ள ஒரு அடுக்குமடி குடியிருப்பில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த மாதம் 24 -ந் தேதி திடீர் சோதனை.
- செல்போன், லேப்டாப், டைரி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர்.
ஈரோடு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு திலக் நகரில் உள்ள ஒரு அடுக்குமடி குடியிருப்பில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த மாதம் 24 -ந் தேதி திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக அக்பர் உசேன் லஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் சேலத்தில் பதுங்கி இருந்த அப்துல் அலி ஜுபா என்பவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த ஆசிப் முசாப்தீன் மற்றும் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் யாசின் ஆகியோரது வீட்டில் புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
பின்னர் செல்போன், லேப்டாப், டைரி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். பின்னர் இருவரையும் ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள காவலர் குடியிருப்புக்கு அழைத்து சென்று புலனாய்வு பிரிவினரும், உள்ளூர் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தினர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆசிப் முசாப்தீனுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதும், அந்த இயக்கத்தில் உறுப்பினராக இணைந்து சதி வேலைக்கு திட்டமிட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து ஆசிப் மீது இந்திய தண்டனை சட்டம் 121, 122, 125 மற்றும் உபா எனப்படும் சட்ட விரோத செயல்கள் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் ஆசிப்பை கைது செய்தனர்.
பின்னர் ஆசிப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று கோவை மத்திய சிறையில் இருக்கும் ஆசிப் முசாப்தீனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்து வந்தனர். இதனை ஒட்டி நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மதியம் 12 மணியளவில் ஆசிப் முசாபுதின் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.