தமிழ்நாடு

அரக்கோணம் அருகே அம்மிக்கல்லை போட்டு கணவனை கொன்ற மனைவி

Published On 2022-09-27 04:43 GMT   |   Update On 2022-09-27 04:43 GMT
  • குடும்ப தகராறில் அம்மிக்கல்லை போட்டு தனது கணவரை கொலை செய்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
  • தந்தை இறந்துவிட்டார் தாய் கைதானார். இதனால் அந்த குழந்தைகள் தவித்து வருகின்றனர்.

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த உரியூர் பகுதியை சேர்ந்தவர் நடேசன் மகன் சீராளன் (வயது 35) இவருடைய மனைவி ஷோபனா (30) தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சீராளன் ரேடியோ சவுண்ட் சர்வீஸ் நடத்தி வந்தார்.

சீராளனுக்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று அதிகாலையில் தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது ஷோபனா வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து சீராளனின் தலையில் போட்டார்.

தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது.தரையில் சரிந்து விழுந்த சீராளன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஷோபனா அங்கிருந்து தலைமறைவானார். அவர் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.

அப்போது குடும்ப தகராறில் அம்மிக்கல்லை போட்டு தனது கணவரை கொலை செய்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீராளன், ஷோபனாவின் மகன், மகள் அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

தந்தை இறந்துவிட்டார் தாய் கைதானார். இதனால் அந்த குழந்தைகள் தவித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News