ராமேஸ்வரம் மீனவர்களை தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்- வலைகளையும் சேதப்படுத்தியதாக புகார்
- கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் சுற்றிவளைத்து தாக்கினர்.
- மீனவர்கள் வைத்திருந்த மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்தினர்.
ராமேஸ்வரம்:
இந்திய-இலங்கை கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வது, விரட்டியடிப்பது உள்ளிட்ட சம்பவங்களில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது தமிழக மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இருந்தபோதிலும் தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை தொடர்ந்தபடியே இருக்கிறது.
இந்த நிலையில் நேற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன்வளத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற்று சுமார் 500 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய-இலங்கை கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் இலங்கை கடற்படையினர் படகில் ரோந்து வந்துள்ளனர். 10 படகுகளில் வந்த அவர்கள் 20-க்கும் மேற்பட்ட ராமேசுவரம் மீனவர்களின் விசைப்படகுகளை சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி வந்திருப்பதாக கூறி ராமேசுவரம் மீனவர்களை அவர்கள் சரமாரி தாக்கி உள்ளனர்.
மேலும் அவர்களது படகில் இருந்த மீன்பிடி வலைகளை வெட்டி சேதப்படுத்தி அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். இதையடுத்து அந்த மீனவர்கள் அனைவரும் கடலில் மீன்பிடிக்க முடியாமல் கரைக்கு திரும்பினர்.
அவர்கள் இன்று அதிகாலை ராமேஸ்வரம் துறைமுகத்துக்கு வந்தனர். இலங்கை கடற்படையினர் தங்களை தாக்கி, வலைகளை சேதப்படுத்தி விரட்டியடித்தது குறித்து சக மீனவர்களிடம் கூறினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறியதாவது:-
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த எங்களை இலங்கை கடற்படை வீரர்கள் சுற்றிவளைத்து தாக்கினர். மேலும் நாங்கள் வைத்திருந்த மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்தினர். இதனால் எங்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரின் இந்த செயலால் நாங்கள் மீன்பிடிக்க வழியின்றி தவிக்கிறோம். எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.