தமிழ்நாடு

சிறப்பு கோர்ட்டுகள் விடுவித்த வழக்குகள்: அமைச்சர் ஐ.பெரியசாமி, வளர்மதி பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2023-09-08 10:15 GMT   |   Update On 2023-09-08 10:15 GMT
  • சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
  • இரு வழக்குகளும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தன.

சென்னை:

கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக கடந்த 2012-ம் ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இதேபோல 2001-2006ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு, 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இந்த இரு வழக்குகளும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தன.

இந்த 2 வழக்குகளுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை, அமைச்சர் ஐ .பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 12-ந்தேதிக்கு தள்ளி வைத்து உள்ளார்.

Tags:    

Similar News