தமிழ்நாடு

அதிக வீட்டு பாடங்கள் கொடுத்ததால் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

Published On 2023-08-21 05:00 GMT   |   Update On 2023-08-21 05:00 GMT
  • உடல் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது .
  • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்:

சேலம் மரவனேரி பிரபுநகர் பகுதியை சேர்ந்தவர் மதன்கிருஷ்ணன். இவரது மகன் சாரதி (16). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் 10-ம் வகுப்பு படிப்பதால் பள்ளியில் அதிக அளவில் வீட்டுப்பாடம் கொடுத்துள்ளனர். இதனை அவர் சரியாக எழுதாததால் ஆசியர்கள் கண்டித்துள்ளனர். இதனால் சாரதி பள்ளிக்கு செல்ல மனமில்லாமல் இருந்துள்ளார்.

இதற்கிடையே அவரது பெற்றோரும் 10-ம் வகுப்பு படித்து முடியும் வரை சற்று கஷ்டமாகதான் இருக்கும், இதனால் பள்ளிக்கு செல்லுமாறு கூறி உள்ளனர். இதனால் மனம் உடைந்த தனது சகோதரனிடம் நாளை பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று சாரதி கூறி உள்ளார்.

பின்னர் நேற்றிரவு வீட்டில் தூங்க சென்றார். சற்று நேரத்தில் வீட்டின் கதவை பெற்றோர் தட்டிய நிலையில் கதவை திறக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டில் உள்ள மின் விசிறிக்காக அமைக்கப்பட்ட கொக்கியில் தூக்கு போட்ட நிலையில் தொங்கினார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். தொடர்ந்து அவரது உடல் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது .

இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News