தமிழ்நாடு

சென்னை மாநகராட்சியில் கியூ.ஆர்.குறியீட்டை ஸ்கேன் செய்து சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தலாம்

Published On 2023-05-17 08:38 GMT   |   Update On 2023-05-17 10:04 GMT
  • கடந்த சில மாதங்களாக சோதனை அடிப்படையில் பரிசோதிக்கப்பட்டது.
  • குறைபாடுகள் சரி செய்யப்பட்ட பிறகு கியூ.ஆர்.குறியீட்டை பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை:

சென்னையில் கியூ.ஆர்.குறியீட்டை பயன்படுத்தி சொத்துவரி, குடிநீர் வரி செலுத்துவதற்கான வசதி தொடங்கப்பட்டுள்ளது. மின்ஆளுமை மற்றும் ஜி.ஐ.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கியூ.ஆர். குறியீடு மூலம் பொது மக்கள் சேவைகளை செயல்படுத்துவதற்கான மாநில அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த புதிய வசதி தொடங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியம் ஆகியவற்றில் 80 லட்சம் நுகர்வோர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் வீடுகளிலும் கியூ.ஆர். குறியீடு ஒட்டப்படும். அதன் மூலம் பொதுமக்கள் ஸ்கேன் செய்து குடிநீர் வரி, சொத்து வரியை கட்டலாம்.

மாநகராட்சி பணிகள் தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தாலும் இந்த கியூ.ஆர். குறியீடு மூலம் தெரிவிக்கலாம்.

இதற்கு முன்பு மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்துக்கு குறைகள் தொடர்பாக புகார் செய்ய ஒவ்வொரு முறையும் அதிகாரிகளின் நம்பரை தேடி கண்டுபிடிக்க வேண்டும். அல்லது நேரில் செல்ல வேண்டும். இவை இரண்டுமே கடினமானது.

இந்த பிரச்சினைகளை தடுக்க கோடை வெயில் மற்றும் பருவமழை காலத்தில் இந்த வசதி பயனுள்ளதாக அமையும்.

கடந்த சில மாதங்களாக இந்த முறை சோதனை அடிப்படையில் பரிசோதிக்கப்பட்டது. அதில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்பட்ட பிறகு கியூ.ஆர்.குறியீட்டை பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

சொத்துவரி, குடிநீர் வரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெறுதல், பொதுவான குறைகளை பதிவு செய்தல், திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுதல், வர்த்தக உரிமம் பெறுதல் போன்றவை தொடர்பாகவும் கியூ.ஆர். குறியீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குடியிருப்புகள் தவிர பஸ் நிலையங்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மயானங்கள், சமூக நல மையங்கள் மற்றும் பொது கழிப்பறைகளிலும் கியூ.ஆர். குறியீடு ஒட்டப்படும்.

இது தொடர்பாக கட்டுப்பாட்டு மையத்தில் புகார்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தீர்வு காண்பதற்காக அனுப்பப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News