தமிழ்நாடு

ராமேசுவரத்தில் 7 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை: பொதுமக்கள், பக்தர்கள் கடும் அவதி

Published On 2023-10-14 04:56 GMT   |   Update On 2023-10-14 04:56 GMT
  • பொதுமக்கள் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் குவிந்திருந்த பொதுமக்கள் மின் தடையால் கடும் அவதியடைந்தனர்.
  • தண்ணீர் மோட்டார்கள் இயக்க முடியாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்ட ராமேசுவரம் தீவுக்கு மண்டபம் துணை மின் நிலையத்தில் இருந்து உயர் மின்னழுத்த கம்பிகள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ராமேசுவரம் துணை மின் நிலையத்தில் இருந்து வரும் உயர் மின்னழுத்த கம்பத்தில் உள்ள பீங்கான் இன்சுலேட்டர் மழையின் காரணமாக வெடித்துச் சிதறியது. இதன் காரணமாக ராமேசுவரம் நகர் முழுவதும் இன்று அதிகாலை 3 மணி முதல் இருளில் மூழ்கியது.

பொதுமக்கள் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் குவிந்திருந்த பொதுமக்கள் மின் தடையால் கடும் அவதியடைந்தனர். ஓட்டல்களில் உணவு தயாரிக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது. தண்ணீர் மோட்டார்கள் இயக்க முடியாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மின் கம்பத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்ய 20-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றினர். இருப்பினும் இன்று காலை 10 மணி வரை ராமேசுவரத்தில் மின் வினியோகம் வழங்கப்படவில்லை.

மகாளய அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்துள்ள நிலையில் 7 மணி நேரமாக ஏற்பட்டுள்ள மின்தடை பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News