தமிழ்நாடு

மாநகர பஸ்களில் இருக்கையின் பின்புறம், பக்கவாட்டில் தனியார் விளம்பரம் செய்ய திட்டம்

Published On 2022-08-19 07:35 GMT   |   Update On 2022-08-19 09:31 GMT
  • சென்னை மாநகர பஸ்களில் விளம்பரம் செய்வதன் மூலம் வருவாயை மேலும் அதிகரிக்க முடியும் என கருதுகிறது.
  • அதன்படி 3000 பஸ்களில் விளம்பரம் செய்வதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது மாநகர பஸ்களின் பின்புறத்திலும், டிரைவர் இருக்கையின் பின்புறத்திலும் மட்டும் விளம்பரம் செய்ய அனுமதி உள்ளது.

இதன் மூலம் குறைந்த அளவிலேயே வருவாய் கிடைப்பதால் மற்ற பகுதிகளிலும் விளம்பரம் செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது.

பஸ்சின் 2 பக்கமும், தனியார் விளம்பரம் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் அரசு பஸ்களில் 2 பக்கவாட்டியும் விளம்பரம் செய்யப்படுகிறது.

அது போல சென்னை மாநகர பஸ்களில் விளம்பரம் செய்வதன் மூலம் வருவாயை மேலும் அதிகரிக்க முடியும் என கருதுகிறது. அதன்படி 3000 பஸ்களில் விளம்பரம் செய்வதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இது தவிர 500 பஸ்களில் பயணிகள் இருக்கையின் பின்புறம் 'ஏ4' அளவில் விளம்பரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இருக்கைகளில் விளம்பரம் செய்யும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதற்கு உள்ள வரவேற்பை தொடர்ந்து மேலும் 1000 பஸ்களில் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்படும் என்று மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ஏ.சி. பஸ், 2 மகளிர் பஸ்களில் பக்கவாட்டில் அரசு நிறுவன விளம்பரம் செய்யப்பட்டுள்ளன. இது போல தனியார் விளம்பரமும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த பஸ் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியிடும் போது இடையிடையே தனியார் தொழில் சார்ந்த விளம்பரம் செய்யவும் முடிவு செய்துள்ளோம். இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்படும் என்றார்.

Tags:    

Similar News