தமிழ்நாடு

கோவில் பிரச்சனையால் பொதுமக்கள் சாலை மறியல்... பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு

Published On 2024-01-31 07:45 GMT   |   Update On 2024-01-31 07:45 GMT
  • கோட்டாட்சியர், இந்து சமயஅறநிலையத்துறை இணை ஆணையர் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை.
  • நிலக்கோட்டை டி.எஸ்.பி. தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட இந்த கோவிலில் ஒரு தரப்பினர் தங்கள் சமூகத்திற்கு மண்டகப்படி வழங்க வேண்டும் என கேட்டு கடந்த 19-ந்தேதி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோவில் செயல் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் அதன் பிறகு எந்தவித உத்தரவாதமும் வழங்கப்படாததால் மீண்டும் கடந்த 27-ந்தேதி முதல் கோவில் வளாகத்திலேயே தங்கி போராட்டத்தை தொடர்ந்தனர்.

கோட்டாட்சியர், இந்து சமயஅறநிலையத்துறை இணை ஆணையர் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால் இன்று ஊர்வலமாக புறப்பட்டு சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை டி.எஸ்.பி. தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்தியவர்கள் பழைய வத்தலக்குண்டு மாரியம்மன் கோவிலில் இருந்து கையில் கருப்புக் கொடி ஏந்தியும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் வாசகங்களை ஏந்தியபடியும் ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags:    

Similar News