தமிழ்நாடு

சென்னை காவல்துறையில் பணிபுரியும் 19 ஆயிரம் போலீசார் தபால் ஓட்டு போடும் பணி இன்று தொடங்கியது

Published On 2024-04-11 05:46 GMT   |   Update On 2024-04-11 05:46 GMT
  • தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என 3 தொகுதிகளிலும் இதற்காக தனித்தனி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
  • விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ள மற்ற பாராளுமன்றத் தொகுதிகள் அனைத்துக்கும் சென்னையில் பணிபுரியும் போலீசார் ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் 1 லட்சத்து 90 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சென்னையில் 19 ஆயிரம் போலீசார் தேர்தல் நாளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்தல் நாளில் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதால் போலீசாரால் வாக்குப் பதிவு மையங்களுக்கு நேரில் சென்று ஓட்டு போட முடியாது என்பதால் ஒவ்வொரு தேர்தலின் போதும் தபால் ஓட்டுகளை போட வசதி செய்து கொடுக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் 19 ஆயிரம் போலீசாரும் தபால் ஓட்டுகளை இன்று முதல் 3 நாட்கள் போடுவதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது.

தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என 3 தொகுதிகளிலும் இதற்காக தனித்தனி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வடசென்னை தொகுதி வாக்காளர்களாக இருக்கும் போலீசார் வண்ணாரப்பேட்டை பேசின் பால சாலையில் உள்ள வட்டார துணை ஆணையர் அலுவலகத்துக்கு சென்று வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்சென்னை தொகுதியில் வசிக்கும் போலீசார் அடையாறு முத்துலட்சுமி சாலையில் உள்ள அலுவலகத்திலும், மத்திய சென்னை தொகுதியில் வாக்காளர்களாக இருக்கும் போலீசார் செனாய் நகர் புல்லா அவென்யூவில் உள்ள அலுவலகத்திலும் ஓட்டு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் வாக்காளர்களாக இருந்து கொண்டு சென்னையில் பணிபுரியும் போலீசாரும் தங்களது தொகுதி வேட்பாளர்களுக்காக ஓட்டு போடுவதற்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ள மற்ற பாராளுமன்றத் தொகுதிகள் அனைத்துக்கும் சென்னையில் பணிபுரியும் போலீசார் ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரையில் போலீசார் தபால் ஓட்டுகளை போடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்றே போலீசார் 3 மையங்களிலும் திரண்டு தங்களது தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர்.

Tags:    

Similar News