எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் தொட முடியாது- எடப்பாடி பழனிசாமி பேச்சு
- குடும்ப வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
- தி.மு.க., ஆட்சியில் துன்பமும், வேதனையும் தான் மக்களுக்கு கிடைத்துள்ளது.
திருவொற்றியூர்:
வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் தெருவில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ஏழைகளுக்கு தையல் இயந்திரங்கள், மீன் பாடி வண்டிகள், காய்கறி வியாபாரம் செய்யும் வண்டிகள், இட்லி வியாபாரம் செய்யும் பாத்திரங்கள், மீன் வியாபாரம் செய்யும் அன்ன கூடைகள், அயன் பாக்ஸ் மற்றும் ஆயிரக்கணக்கானோருக்கு அரிசி பைகள் என 7575 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., மறைந்த பிறகு இரண்டாக உடைந்த அ.தி.மு.க.வை ஒன்றாக இணைத்தவர் அம்மா. பீனிக்ஸ் பறவைபோல எழுந்து வந்து 15 ஆண்டு காலம் ஆட்சியமைத்தார். புரட்சித்தலைவரும் புரட்சித் தலைவியும் நாட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள். அவர்கள் உருவாக்கிய இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. சாதாரண கிளை செயலாளர் முதல்வராக முடியும் என்றால் அது அ.தி.மு.க.வில் தான். தி.மு.க.வில் அது நடக்காது. குடும்ப வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அ.தி.மு.க., ஒரு ஜனநாயக கட்சி. இரண்டு தலைவர்கள் மறைவுக்கு பின்னர் கட்சியை முடக்க எத்தனையோ அவதாரம் எடுத்தனர். ஆனால், கட்சியை மீட்டு காட்டியிருக்கிறோம். தி.மு.க., ஆட்சியில் துன்பமும், வேதனையும் தான் மக்களுக்கு கிடைத்துள்ளது. மக்களுக்கு எந்த நல்ல திட்டத்தையும் இவர்களால் கொடுக்க முடியவில்லை. 520 அறிவிப்புகளில் எந்த ஒரு முக்கிய திட்டத்தையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் பேசுகையில், இந்த பொதுக்கூட்டம் இந்த இடத்தில் நடைபெறவிடாமல் தடுப்பதற்காக பல்வேறு தடைகளை ஏற்படுத்தினர் அதையும் மீறி இந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது இது போன்ற எந்த இடங்களிலும் யாருக்கும் செய்ததில்லை. காலம் ஒருநாள் மாறும். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைய அனைவரும் பாடுபடுவோம் என்றார்.
முன்னதாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, டி.ஜி. வெங்கடேஷ் பாபு, விருகை வி.என். ரவி, வேளச்சேரி எம்.கே. அசோக், மாநில இளைஞரணி இணை செயலாளர் இ. லட்சுமி நாராயணன், அனைத்துலக எம். ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் புரசை வி. எஸ். பாபு, பெரம்பூர் மேற்கு பகுதி செயலாளர் என். எம். பாஸ்கரன், தெற்கு பகுதி செயலாளர் வியாசை இளங்கோவன், கொளத்தூர் பகுதி செயலாளர்கள் பட்மேடு டி.சாரதி, கே.சி.கார்டன் சந்தர சேகர் மற்றும் கோவை சத்யன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.