தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2023-01-06 09:34 IST   |   Update On 2023-01-06 09:34:00 IST
  • மேட்டூர் அணைக்கு வரத்தை காட்டிலும், நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
  • நேற்று 117.06 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 116.53 அடியாக சரிந்தது.

மேட்டூர்:

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும் ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது.

ஒகேனக்கல் காவிரியில் இன்றும் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக நீடித்தது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 3,123 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 3,165 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியில் இருந்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

அணைக்கு வரத்தை காட்டிலும், நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 117.06 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 116.53 அடியாக சரிந்தது.

Tags:    

Similar News