தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியாக நீடிப்பு

Published On 2022-11-04 09:35 IST   |   Update On 2022-11-04 09:35:00 IST
  • தொடர்ந்து இன்று 4-வது நாளாக அதே அளவு தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
  • அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் விநாடிக்கு 26 ஆயிரத்து 750 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர்:

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே தமிழக மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் ஒகேனக்கல் முதல் மேட்டூர் இடையிலான காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்கிறது.

இந்த மழை நீரும் மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் கடந்த 1-ந்தேதி மாலையில் நீர்வரத்து விநாடிக்கு 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

தொடர்ந்து இன்று 4-வது நாளாக அதே அளவு தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் விநாடிக்கு 26 ஆயிரத்து 750 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதாவது அணை உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 4,500 கன அடி வீதமும், அணையையொட்டியுள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக 21,500 கன அடி வீதமும் கால்வாயில் 750 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீர் காவிரியில் கரை புரண்டு ஓடுவதால் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் அதிகாரிகள் மீண்டும் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News