தமிழ்நாடு

மத்தூர் அருகே பாம்பாறு அணையில் உறவினர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி

Published On 2023-05-21 08:20 GMT   |   Update On 2023-05-21 08:20 GMT
  • உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து அறிவழகனின் உடலை பார்த்து கதறிஅழுதனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த அயலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தமூர்த்தி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு அறிவழகன் (வயது23) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ., படித்து வந்தார்.

இந்த நிலையில் மத்தூரில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு அறிவழகன் வந்தார். நேற்று மாலை தனது அக்கா மகன்கள் மற்றும் உறவினர்களுடன் அறிவழகன் பாம்பாறு தடுப்பணைக்கு சென்றார். அங்கு அவர்கள் தடுப்பணையின் கரையோரமாக நீரில் குளித்து மகிழ்ந்தனர். இதில் நீச்சல் தெரியாத அறிவழகன் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். அப்போது உடன் உறவினர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். அதற்குள் அறிவழகன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கி இறந்துபோன அறிவழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து அறிவழகனின் உடலை பார்த்து கதறிஅழுதனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News